ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 17: 8-13
இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 3: 14-17, 4:1-2
நற்செய்தி வாசகம் : லூக்கா 18:1-8
திருப்பலி முன்னுரை
திருச்சபையோடு இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனோடு தன்னை ஒப்புரவாக்க வந்திருக்கும் இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமக்கு தொந்தரவு தருபவர்களுக்கு நன்மை செய்ய நம் உலகில் பலர் உண்டு. அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவர்கள் கேட்பதை பலர் நிறைவேற்றுவர் ஆனால் மானிடமகன் தாம் தேர்ந்தெடுத்த மக்களுக்காக காலம் தாழ்த்தாமல் அனைத்தையும் நிறைவேற வகை செய்யவார் என்பது நற்செய்தி வழியாக வெளிப்படுத்தப்படுகிறது.
இன்றைய உலகில் காலம் தாழ்த்தி கிடைக்கப்பெறும் நல்லவைகள் நமக்கு தேவைப்படாதவையாக கருதப்படலாம், என்றாலும் எது எப்போது நமக்கு கிடைத்தால் நாம் மகிழ்வாக இருப்போம் என்று இறைவன் அறிவார். ஆகையால் காலம் கழிந்த நன்மைதனங்களுக்காக வருந்தாமல் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
நம்மை படைத்த இறைவன் குறித்த நேரத்தில் நமக்கு நலமான தேவையான அனைத்தையும் நிறைவேற்றுவார். வாழ்வின் அனைத்து நல்ல செயல்களுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறி இனி நடக்கவிருக்கும் நன்மைகள் விரைவில் நம் வாழ்வில் நடைபெற வரம் கேட்டு திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
இஸ்ரேல் மக்களுடன் அமலேக்கியர் புரிந்த போரினை மையமாக வைத்து இவ்வாசகம் அமைகிறது. மோசேயின் கை ஓங்கியபடியால் இறைவனின் துணையோடு இஸ்ரேல் மக்கள் வெற்றி கொண்டனர். அவர்களின் வெற்றி உலகம் உள்ளவரை எடுத்துரைக்கப்படும். இறைவனை துணைக்கொண்டு நாம் மேற்கொள்ளும் அனைத்துவிதமான செயல்களிலும் நமக்கும் வெற்றி உண்டு என்பதை உணர்ந்தோராய் நாம் மேற்கொள்ளும் அனைத்து செயலிலும் இறைவனை முன்னிறுத்த வாசகத்திற்கு உள்ளக் கதவுகளை திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுலின் அறிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாசகம் அமைகிறது. மறைநூல் நம்மை சீராக வழிநடத்துவதற்கும், நம்மை மீட்பதற்கும் வழிவகை செய்யும் என கூறுகிறார் தூய பவுல். இறைவார்த்தையை அறிவிப்பதில் கருத்தாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இவ்வாசகத்தை கேட்கும் நாமும் மறைநூலின் துணைக்கொண்டு நமது வாழ்வை சீர்படுத்தி இறைவார்த்தையை பிறருக்கு அறிவிக்கும் மனம் பெற வாசகத்திற்கு செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
எபிரேயர் 4:12
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- நன்மையின் தூதனே எம் இறைவா! தீமைகளை எதிர்த்து கடவுளின் கனவு நனவாகிட குரல் கொடுப்பவர்கள் இறை தூதர்கள். அந்த வகையில் நாங்களும் எம் வாழ்வை சீர்படுத்தி தீமைகளை அழித்து நன்மைகளை எம் வாழ்வின் துணையாகக் கைக்கொண்டு வாழ உமதருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இறைவார்த்தை வழியாக எம்மோடு உறவாடி எம்மை சீர்படுத்தும் இறைவா! உம்முடைய வார்த்தை உயிருள்ளது ஆற்றல் மிக்கது என்பதை நாங்கள் உணரவும்; உமது வார்த்தைக்கு எம் வாழ்வில் இடமளித்து எம் வாழ்வின் ஒளியாக திகழவும், உமது வார்த்தைகள் வழி எம் வாழ்வு அமைய வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- கடவுளுக்கு உகந்ததையே நாடும் எம் இறைவா! போலிப் புகழுரைகளும் முகமூடிகளும் நிறைந்த உலகில் வாழும் நாங்கள் மனிதனின் தயவைப் பெற கடவுளை விட்டு விலகி வாழ்ந்த தருணங்களை களைந்து, கடவுளுக்கு உகந்ததையே என்றும் எப்போதும் நாடி வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கவலைகளை அகற்றி வாழ எம்மை அழைத்த இறைவா! தேவையற்ற கவலைகளை அகற்றினாலே வாழ்வு மகிழ்ச்சியை கண்டுகொள்ளும் என்பதை நாங்கள் உணர்ந்து எம் வாழ்வில் காணப்படும் தேவையற்ற கவலைகளை அகற்றி உமது வழியை பின்பற்றி வாழவும், எம் வாழ்வுக்கு எது தேவையானது எது தேவையற்றது என்று பகுத்தறியும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உழைப்பிற்கேற்ற பலன்களை எம் வாழ்வில் தருபவரே இறைவா! எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படாத போது, உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காத போது எம் மனம் கலங்கி வாழ்வில் விரக்தி ஏற்படுகிறது. இவற்றை களைந்து எமது உழைப்புக்கு ஏற்ற பலனும், வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெற்று நாங்கள் எப்போதும் உம்மை துதிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு