ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம் : 2 அரசர்கள் 5: 14-17
இரண்டாம் வாசகம் : 2 திமொத்தேயு 2: 8-13
நற்செய்தி வாசகம் : லூக்கா 17: 11-19
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று தன்னை இறைவனுடன் இணைத்து இறைவனின் ஆசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்வின் எச்சூழலிலும் அசைக்க முடியாத ஒன்று நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கை வாழ்வில் இருந்தால் நம் வாழ்வு மிகவும் அழகானதாக மாறும். நம்பிக்கையோடு சேர்ந்த நன்றி உணர்வும் இன்றைய நற்செய்தியின் மையமாக அமைந்துள்ளது.
தன் வாழ்வு நன்றாக மாறும், தன் நோய்கள் விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை மனிதர்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்து அவர்களின் உயிரோட்டமாக வாழ்வை மாற்றி நல்வழிப்படுத்துகிறது. இன்றைய நம் உலகில் போலியான நம்பிக்கைகள், வாக்குறுதிகள் மலிந்துள்ளன. இவற்றை இனம் கண்டு நம்மை காக்க இறைவனின் துணை அவசியம்.
இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம் வாழ்வை சிறப்பாக்கும். இறைவன் நமக்கு செய்த நன்மைகளுக்காக நாம் கூறும் நன்றி என்றும் நம் வாழ்வை இறைவனில் நிலைபெற வழிவகுக்கும். பல போலியான உறவுகளுக்கிடையே வாழும் மனிதர்கள் உண்மையான இறைவுறவை கண்டடைய இறைநம்பிக்கை ஒரு கருவியாக செயல்படும்.
இறைநம்பிக்கையில் நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் நன்றி உணர்வும் அதனோடு நம்மில் நிலைபெறும் என்பதை உணர்வோம். இறைவனின் நம்பிக்கை வழியாக நம் வாழ்வை மகிழ்ச்சியாக்க இறைபாதம் நம் வாழ்வை அர்ப்பணித்து நிலைவாழ்வு பெற வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
நாமான் நலம் பெற்றதை முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. தனது நோய் குணமாக எதையும் செய்ய துணியும் மனிதர்கள் வாழும் பூமியில் இறைவனை சென்றடையும் வழியை சொல்பவர்களை புறக்கணிப்பவர்களும் இருக்கிறார்கள். இறைவன் மீது கொள்ளும் நம்பிக்கை நம்மை விரைவில் குணப்படுத்தும் என்றும் பெற்ற நலன்களுக்காக நன்றி கூறுவதும் உயர்வான செயல்கள் என்றும் கூறுகிறது இவ்வாசகம். இறைநம்பிக்கை வழியாக நாமும் நலம்பெற வாசகத்திற்கு நம்மை தயாரிப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்துவின் நல்லதொரு படைவீரனாக தன்னை திமொத்தேயு மக்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறார் திருத்தூதர் பவுல். கடவுளின் வார்த்தையை சிறைபடுத்த முடியாது என்றும் கடவுளோடு நிலைத்திருந்தால் அவரோடு வாழ்வோம் என்றும் கூறுகிறார் திருத்தூதர். அவர் நம்பத்தகுந்தவராய் இருப்பதால் உலகம் நிலைபெற்று வாழ்கிறது என்று கூறும் வாசகத்தை கேட்கும் நாம் இறைநம்பிக்கையில் வளர வாசகத்தை நமதாக்குவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
1 தெசலோனிக்கர் 5:18
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- நேர்மையோடு வாழ அழைக்கும் இறைவா! பொய்மைவழி சேரும் செல்வம் ஆசீரல்ல என்றும் பிறரை வஞ்சித்து சேர்க்கும் செல்வத்தில் ஏழை மக்களின் கண்ணீர் கலந்துள்ளது என்பதை நாங்கள் உணர்ந்து எவரையும் ஏமாற்றி செல்வம் சேர்க்காமல் நேர்மையாய் உழைக்க அருள் தர உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை நன்மையால் நிரப்பும் இறைவா! நாங்கள் பிறரை நல்வர் தீயவர் என்று தீர்ப்பிடாமல், நீர் அனைவரையும் நேசிப்பவர் என்பதை மனதிற்கொண்டு பிறரிடம் இருக்கும் நன்மைதனங்களை பார்த்து அவர்களை அன்பு செய்து வாழ உமதருள் பொழிய உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை பகுத்தறிந்து வாழ வலியுறுத்திய அன்பு இறைவா! உலக இன்பங்களில் சிக்கி திணறும் சிறார்கள், இளையோர்களை கண்ணோக்கி பாரும். அவர்கள் அறிவியலின் வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து வாழவும், தங்கள் வாழ்க்கைக்கு எது பலன் தருவது எது வீணானது என்பதை பகுத்தறியும் ஞானத்தை தந்தருள உம்மை மன்றாடுகின்றோம்.
- நேரத்தின் மேன்மையை எமக்கு எடுத்துரைத்த இறைவா! நேரம் மிகமிக முக்கியமானது. காலம் தவறுதலும், காலம் கடத்துதலும் வெற்றியாளருக்கு எதிரானது என்பதை நாங்கள் உள்ளத்தில் கொண்டு வாழவும்; உரிய காலத்தில் செய்ய வேண்டியதை செய்து வெற்றியை வசப்படுத்த உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- நம்பிக்கையால் எம் வாழ்வை வளப்படுத்தும் இறைவா! துன்பங்களும் வேதனைகளும் எம்மை துரத்தும் போது உம் மீதான நம்பிக்கை சில நேரங்களில் குலைந்து போகிறது. கடவுள் எந்நிலையிலும் எம்மை கைவிடமாட்டார் என்ற எமது நம்பிக்கையே எங்கள் வாழ்வை முன்னோக்கி நகர்த்தும். ஆகவே உம்மில் நம்பிக்கை கொண்டு எம் வாழ்வை வளப்படுத்த உமதருள் தர உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு