ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம்: பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9: 13-18
இரண்டாம் வாசகம்: பிலமோன் 2: 9-10, 12-17
நற்செய்தி வாசகம்: லூக்கா 14: 25-33
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறைவனின் அருள் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சீடத்துவ வாழ்வு என்பது தன்னுடைய அனைத்தையும் இறைவனுக்காக துறந்து தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்வதே. இதை நம் இறைமகன் இயேசுவும் தன் வாழ்வு வழியாக வாழ்ந்து காட்டினார். சீடத்துவத்தின் முன்மாதிரியாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் நம் இறைவன்.
தான் மேற்கொள்ளும் காரியத்தை குறித்த சுயபரிசோதனையும், சீரிய தொலைநோக்கு பார்வையும், சிறந்த ஆளுமையும் கொண்டு செயல்படுவதே சீடத்துவ வாழ்வின் ஆதாரங்கள். பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே அறிந்து அதற்கேற்ப திட்டங்கள் வகுத்து இறைவனுக்காக வாழ்வதே உண்மை சீடத்துவம்.
அன்பின் உயர்நிலையாய், விசுவாசத்தின் இலக்கணமாய் தன்னைக் குறித்த கவலையின்றி பிறருக்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக மனம் சீடத்துவத்தின் பரிணாமமாய் திகழ வேண்டும். இதனை சகோதர அன்பின் வழியாக வெளிப்படுத்த முடியும் என்கிறார்கள் திருத்தூதர்கள்.
இவ்வாறு இயேசுவின் வழியை பின்பற்றி உண்மையான சீடத்துவ வாழ்வு வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
சாலமோனின் ஞானம் நூலிலிருந்து முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. சாலமோன் அரசரின் ஞானத்திற்கான மன்றாட்டை விவரிக்கும் விதமாக இவ்வாசகம் அமைகிறது. ஞானம் அனைத்தையும் உய்த்துணர்ந்து தெளிவு ஏற்படுத்துவது. பிழைகளை களைந்து ஆண்டவரின் நீதியை உலகறிய செய்வது. இந்த ஞானத்தின் வழியாக மனிதர் கடவுளின் சீடராவது உறுதி. அனைத்தையும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்து ஆண்டவரின் சீடராய் பயணிக்கும் ஞானம் நம்மில் வளர வாசகத்திற்கு மனதை திறப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து இரண்டாம் வாசகம் அமைந்துள்ளது. பயனற்றவற்றையும் பயனுள்ளதாய் மாற்ற கிறிஸ்துவால் இயலும் என்கிறார் திருத்தூதர். நன்மையை கட்டாயத்தினால் அல்ல மாறாக மனமாற செய்ய வேண்டும் என்றும் சகோதர அன்புடன் சீடத்துவ வாழ்வை வாழ வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் திருத்தூதர். ஆகவே இவ்வாசகத்தை கேட்கும் நாமும் சகோதர அன்பில் நிலைத்து சீடத்துவ வாழ்வு வாழ வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திருப்பாடல்கள் 119:135
உம் ஊழியன் மீது உமது முகவொளி வீசச் செய்யும் உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- புதிய ஆவியை எமக்கு அருளும் இறைவா! இறைவனின் இதயத்திற்கு வெறுக்க தெரியாது, புதிய ஆவியும் நேர்மறை எண்ணங்களை மனிதனுள் விதைக்கும். புதிய ஆவியும் இதயமும் எப்போதும் பிறரை அன்பு செய்து வாழும். ஆகவே புதிய இதயமும் புதிய ஆவியும் புதிய அனுபவமும் நாங்கள் பெற்று வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- உறவுகளை புதுப்பிக்கும் இறைவா! உலக மக்கள் தங்கள் உறவுகளை என்றும் புதுப்பித்து தங்களிடையே காணப்படும் வேற்றுமைகளை மறந்து வாழவும், அனைவரையும் அன்பு செய்து, ஒருவருக்கொருவர் உதவும் சூழலை தங்களிடையே உருவாக்கவும், அனைவருக்கும் பயன்படும் உறவுகளாக நாங்கள் வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அறத்தை வலியுறுத்தும் இறைவா! மனிதன் கடவுளோடு இணைந்து வாழும் போது மனித வாழ்வு மேன்மை அடைகிறது. மேலும் அறம் பேணா உலகில் ஆண்டவனுக்கும் வேலையில்லை; அன்பில்லா வாழ்வில் கடவுளுக்கும் இடமில்லை என்பதை நாங்கள் உணர்ந்து எம் வாழ்வில் அன்பையும், அறத்தையும் கடைபிடித்து வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- எம்மை கண்டித்து திருத்தும் பரமனே இறைவா! கண்டிக்கப்படுவதை விரும்பாத மனிதர்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் காண முடியாது என்பதை உணர்ந்து கண்டிப்பினை எம் வாழ்வில் ஏற்கவும், அது அன்பின் வடிவாக இருத்து எம்மை மாற்றத்தை நோக்கி வழிநடத்தவும், திருத்தப்படுவதை விரும்பி ஏற்கும் மனப்பக்குவத்தை எமக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சகிப்புத்தன்மையோடு வாழ பணிக்கும் இறைவா! துன்பங்கள் மனித வாழ்வின் அங்கங்கள். அந்த துன்பங்கள் வரும்பொழுது மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக கோபம், பதட்டம் ஆகியவற்ற களைந்து அனைத்தையும் பொறுமையோடும் கனிவோடும் எதிர்கொள்ளவும்; தெளிவான ஞானத்தோடு எமது வாழ்வை வழிநடத்த தேவையான வரங்களை பொழிந்து காக்க உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு