ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : பச்சை
வாசகங்கள்
முதல் வாசகம் : சீராக் 3:17-18,20,28-29
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 12:18-19, 22-24
நற்செய்தி வாசகம் : லூக்கா 14:1,7-14
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையருள் பெற்று செல்ல வந்திருக்கும் இறைமக்கள் மற்றும் இறைபணியாளர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
விருந்து என்பது அன்பின் வெளிப்பாடு. விருந்து வைப்போருக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டோருக்கும் அறிவுரையாக நற்செய்தி வாசகம் அமைகிறது. ஏழைகளையும் கைவிடப்பட்டோரையும் விருந்துக்கு அழைப்பதால் அவர்களும் பயன்பெறுவர் கைம்மாறும் மிகுதியாகும் என்கிறார் ஆண்டவர்.
மனத்தாழ்வும் கனிவும் கொண்டு தன்னைத் தாழ்த்தி கொள்ளும் எவரும் முதன்மையாவர். தானே அனைத்திலும் சிறந்தவர் என்று எண்ணும் எவரும் கடைசியாவர். இதை உணர்ந்து தாழ்ச்சியும் பொறுமையும் கொண்டு வாழ வேண்டும்.
தன்னைத் தாழ்த்திக் கொண்டு பாடுகளை ஏற்க துணிந்த இறைமகன் உலகின் அரசரானார். தவறான கணிப்புகளை வாழ்வில் இருந்து அகற்றி என்றும் உயிருள்ள இறைவனிடம் சரணாக செபிப்போம். வாழும் கடவுள் நமது தாழுச்சியை கண்டு மிகுந்த ஞானத்துடன் நம்மை வழிநடத்துவார்.
விண்ணக விருந்தில் தாழ்ச்சியோடு பங்கேற்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வு உறுதி என்பதை உணர்வோம். மனித வழியை விட்டகன்று இறைவழியில் பயணித்து என்றும் இறைவுறவில் வாழ வரம் வேண்டி திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
தாழ்ச்சியை மையமாக வைத்து சீராக்கின் ஞான நூலில் இருந்து முதல் வாசகம் அமைகிறது. மனத்தாழ்வு நம் வாழ்வை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்றும் தவறான கணிப்பு தீர்ப்புகளை ஊறுபடுத்தும் என்றும் கூறுகிறது இவ்வாசகம். உவமைகளை கண்டறிதல் மற்றும் கேட்டறியும் ஆவல் இரண்டும் ஞானமுள்ளவர்களின் செயல்பாடு என்பதை உணர்ந்தோராய் நம் வாழ்விலும் தாழச்சியும் ஞானமும் கொண்டு வாழ வாசகத்தை கவனமுடன் வாசிக்க கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
திருத்தூதர் பவுல் எபிரேய மக்களுக்கு கடவுளின் அருளைப் புறக்கணித்து விடாமல் இருக்க எச்சரிக்கும் விதமாக இவ்வாசகம் அமைகிறது. சீனாய் மற்றும் சியோன் மலைகளைப் பற்றி கூறுகிறார் திருத்தூதர். இயேசுவின் இரத்தத்தினால் இணைக்கப்பட்ட நாம் அனைவரும் கடவுளின் அருளைப் பெறுவது நிதர்சனம், எனினும் கடவுளின் அருளைப் பெற நம்மை தயாரிக்க வாசகத்திற்கு உள்ளத்தை திறப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத்தேயு 11:29
நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- எளியோருக்கு நற்செய்தியை அறிவிக்கும் இறைவா! ஏழைகள் கடவுளின் சாயல்கள் என்பதை நாங்கள் உணரவும், எங்கள் வருவாயில் சிறிய பங்கை எளியோருக்கு வழங்கவும், ஏழை, எளியவர்களுக்கு உதவும் போது கடவுளின் நீதியை வாழ செய்கிறோம் என்பதை உணர்ந்து வாழ வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- விமர்சனப் பார்வையை வளர்க்கும் இறைவா! குறைகளை சுட்டிக் காட்டாமல் நிறைவான சமூகம் படைக்க முடியாது. ஆதலால் பொதுவாழ்விலும், சுயவாழ்விலும் விமர்சனப் பார்வையை வளர்க்கவும், அநீதிகளை சுட்டிக்காட்டி வாழும் துணிவும், எம்மீது வைக்கப்படும் விமர்சனங்களை உமது பாதையில் கையாள வரமருள உம்மை வேண்டுகிறேன்.
- இதயங்களை அருளால் புதுப்பிக்கும் இறைவா! இதயங்களை புதிதாக மாற்றுவது இறைவனில் நம்மை இணையச் செய்யும் என்பதை உணர்ந்தோராய், எம் எண்ணங்கள், பார்வைகள், செய்கைகள் மற்றும் மனங்களை புதிதாக்கி அனைவரும் இணைந்து பயணிக்கும் வரமருள உம்மை மன்றாடுகின்றோம்.
- உண்மையை உரக்கச் சொல்லும் இறைவா! போலியான பாராட்டுகள் மிகையான புகழ்ச்சிகளை நாங்கள் கைவிட்டு, தேவையான தகுதியான பாராட்டுகளை வளர்க்கவும், பிறரை வாழ வைக்கும் உண்மையை உரக்க கூறி உண்மைக்கு சான்றுபகரும் துணிவான வாழ்வை எமக்கு தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- மக்களை நேசிக்கும் அன்பரே இறைவா! எம் தலைவர்கள் தங்கள் சுயநலனுக்காக மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடாமல் மக்கள் மீது அன்பு கொண்டு வாழவும், பெரு நிறுவனங்களுக்கு துணைபோகாமலும் சிறு நிறுவனங்களை நலிவடைய செய்யாமலும் அனைவரையும் சமமாக பாவிக்கும் தலைவர்களை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen
பதிலளிநீக்கு