தூய ஆவி பெருவிழா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : சிவப்பு
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 2: 1-11
இரண்டாம் வாசகம் : உரோமையர் 8: 8-17
நற்செய்தி வாசகம் :யோவான் 14: 15-16, 23-26
திருப்பலி முன்னுரை
தூய ஆவியார் என்ற துணையாளரின் விழாவில் பங்கேற்று அவரது ஆசீரை பெற இறையில்லம் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.
நமக்கு வலிமையளித்து நம்மை காக்கும் இறைவன் நம் வாழ்வுக்கு துணையாளராக தூய ஆவியாரை நியமிக்கின்றார். தூய ஆவியாரின் துணை நமக்கு இருப்பின் நமது மனிதத்தில் புனிதம் காண இயலும். நமக்கு புத்துயிர் அளித்து நாம் பயணிக்க வேண்டிய வழியில் தூய ஆவியார் என்றும் நம்மை வழிநடத்துவார்.
ஆனால் இன்று வளர்ச்சி என்ற போர்வை உலகில் பல மாற்றங்களை அன்றாடம் நிகழ்த்துகிறது. அவசரமான உலகில் இறை அன்பை, இறை அச்சத்தை மறந்து, தானே தலைவன் என்ற உணர்வில் பல செயல்களில் ஈடுபட்டு வாழ்வை இழக்கும் மனிதர் பலர். போதை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் அனைத்தும் ஊனியல்பின் காரணமாக விளைபவை.
இவற்றை களைந்து இறைவாழ்வு வாழ தூய ஆவியின் உடனிருப்பு அவசியம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக அமையவும், உலகில் என்றும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறையவும் தூய ஆவியே துணைபுரிய இயலும். இத்தகைய வல்லமை பெற்றவர் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தும் வண்ணம் செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
அனைத்தையும் உருவாக்கவும், உருவாக்கிய யாவற்றையும் மாற்றவும் வல்லவர் இறைவன். அவராலேயே இவ்வுலகம் இயங்குகிறது. இதை மெய்பிக்க நிகழ்ந்ததே பெந்தகோஸ்தே பெருவிழா. கடவுளின் ஆவியை பெற்றுக் கொண்ட அனைவரும் மனித சாயலை விடுத்து இறைசாயலை அணிந்து கொண்டனர், இதனால் அந்நிய மொழிகளில் பேசி அனைவருக்கும் பொதுவானவர் இறைவன் என்பதை உலகாருக்கு வெளிப்படுத்தினர் திருத்தூதர்கள். தூய ஆவியின் வல்லமையால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ பணிக்கும் வாசகத்தை கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள் என்பதை கூறுகிறது தூய பவுலின் உரோமையர் திருமுகம். உலக இன்பங்களில் பிணைக்கப்பட்டு இறை வாழ்வை கைவிட்ட அனைவரும் ஊன் இயல்புக்கு தங்களை கையளித்து விட்டனர் என்கிறது இவ்வாசகம். தூய ஆவியின் துணை நமக்கு இருந்தால் இறைநாமத்தால் அனைத்தையும் வென்று இறைவனில் சங்கமிக்க இயலும் என்பதை கேட்கும் நாமும் தூய ஆவியை பெற இறைவனில் ஒன்றிணைவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- எமது உடனிருப்பாம் அன்பின் இறைவா! எம்மை உருவாக்கி உரிய காரணத்தோடு நேரிய முறையில் வழிநடத்தி வருகின்றீர். அதை உணர்ந்த நாங்கள் என்றும் உமது வழியினின்று விலகாமல் உம்மை துணையாகக் கொண்டு வாழ்வில் முன்னேற வரம் தாரும்.
- அன்பே உருவான இறைவா! பிறரின் வெளிப்புற தோற்றத்தையோ அவர்களின் தவறையோ எண்ணி விலகி நிற்காமல் உமது மன்னிப்பு வழியாக அவர்களையும் எம்மைப் போல் பாவித்து அன்பைக் காட்ட அருள் புரியும்.
- அனைத்திற்கும் முதன்மையாம் இறைவா! எம் திறமைகள் ஆற்றல்களை பெரிதாக எண்ணி எங்களை முதன்மைப் படுத்தாமல் உமது திட்டத்தினின்று விலகாமல் உமது இறையாட்சியின் வழியாக எம்மையும் பிறரையும் வளர்க்க உமதருள் தாரும்.
- எம்மை வழிநடத்தும் இறைவா! தூய ஆவி பெருவிழாவில் இணைந்து செபிக்கும் நாங்கள், தூய ஆவியார் வழங்கும் கனிகள், கொடைகள், வரங்கள் வழியே எம் வாழ்வை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றவும், எம் வாழ்வு பிறருக்கு முன்மாதிரியாக அமைய உமதருள் பொழிந்தருளும்.
- எம்முடன் இருந்து எம்மை தேற்றும் பரமனே இறைவா! தொற்று நோய்கள் குறையவும்; நோய், விபத்து போன்ற காரணங்களால் அகால மரணமும், துர்மரணமும் சம்பவிக்காமல் உமது கரங்களால் எம்மை பாதுகாத்து வழிநடத்த உம்மை இறைஞ்சுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏 🙏 🙏
பதிலளிநீக்கு