ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நிறம் : வெள்ளை
வாசகங்கள்
முதல் வாசகம் : திருத்தூதர் பணிகள் 1: 1-11
இரண்டாம் வாசகம் : எபிரேயர் 9: 24-28 & 10: 19-23
நற்செய்தி வாசகம் : லூக்கா 24: 46-53
திருப்பலி முன்னுரை
இறைவனின் விண்ணேற்றம் மனிதரின் ஆயத்தம், இறைவனின் விண்ணேற்றம் மனிதரின் மறுவாழ்வு... இறைவனின் விண்ணேற்றப் பெருவிழாவில் கலந்து ஆசீர் பெற்று செல்ல வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கங்கள்.
ஆண்டவராகிய இறைவன் இறந்து உயிர்த்தெழ வேண்டும், அவ்வாறு உயர்த்த ஆண்டவர் நாற்பது நாட்களுக்கு பின் விண்ணேற்றம் அடைய வேண்டும். இதன்படி உயிர்த்த இறைமகன் சீடர்கள் முன் விண்ணில் தூதர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மீண்டும் நம் அனைவரையும் மீட்கும் பொருட்டு அவர் வருவார். உயிருக்கும் உடலுக்கும் கேடு வருவித்துக் கொள்ளும் இவ்வுலகில், தம் உடலையும் உயிரையும் நமக்காக கையளித்த மாபரன் இயேசு. நமக்காக அனைத்தையும் கையளித்தவர் அவர். அவரது அன்பு அளப்பரியது.
ஆண்டவரின் அன்பையும் அவரது உடனிருப்பும் இன்றைய சூழலில் நமக்கு இன்றியமையாதவையாக உள்ளன. அவற்றை உணர்ந்து அவரது உடனிருப்பை உயிர்த்த ஆண்டவர் வழியாக வேண்டி இறை பதம் பணிந்து திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை
உன்னதராகிய இறைவனின் விண்ணேற்ற நிகழ்வை எடுத்துக் கூறுகிறது திருத்தூதர் பணிகள் நூல். விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு மீட்பளிக்க அவரைக் கையளித்தார். என்றும் நம்மீது இரக்கமும் அன்பும் கொண்டு நமக்காக அனைத்தையும் செய்ய துணியும் உறவு கிடைப்பது அரிதானது. அதை செய்து நம்மை அவர் வாழ்வில் ஒன்றிணைத்த இறைவனின் விண்ணேற்றத்தை நினைத்து இறைவனை தியானிப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மனிதரின் வாழ்வு இறப்பு வரை மட்டுமன்று இறந்த அனைவரின் விண்ணக வாழ்வுக்காக இறைமகன் விண்ணேற்றம் வழி ஆயத்தம் செய்கிறார் என்பதை எபிரேயர் திருமுகம் எடுத்துரைக்கிறது. மனிதரால் அல்ல இறைவனால் மட்டுமே நம்மை மீட்க முடியும். இறைவனின் மற்றொரு வருகையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கேட்கும் நாமும் விண்ணக வாழ்வில் பங்கேற்க நம்மை தயாரிப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- தொடக்க கால கிறிஸ்தவர்கள் அன்பு, ஒற்றுமை, அமைதி, பகிர்வு ஆகிய குணங்களில் சிறந்து விளங்கினர். அவர்களைப் போல நாங்களும் இன்றைய சூழலில் அன்புடனும் ஒற்றுமையோடும் அனைத்தையும் பொதுவாகவும் பிறரோடு பகிர்ந்தும் அன்பான வாழ்க்கை வாழ உம்மை மன்றாடுகின்றோம்.
- இன்றைய சமூகத்தில் குற்றங்களும் அவலங்களும் மிகுந்து மக்கள் அனைவரும் அநீதியின் பாதையில் பயணிக்காமல் உமது அருளும் அமைதியும் பெற்று என்றும் சமாதானம் பெற்று நீர் காட்டிய வழியில் வாழ்வை அமைக்க அருள் தாரும்.
- அன்பை போதிக்கும் இறைவா உமது இறையாட்சியின் மதிப்பீடுகளை நாங்கள் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், உமது படைப்பின் நோக்கத்தை நாங்கள் உணர்ந்து எம் வாழ்வின் வழியே பிறருக்கு முன்மாதிரியாக திகழ வரமருளும்.
- பிறரிடம் உண்மையான நட்பு பாராட்டவும், உண்மையின் வழி தியாகத்தை பறைசாற்றவும், நண்பனுக்காக எந்த நிலையிலும் உயிரைக் கொடுப்பதே மேலான அன்பு என்பதை உணர்ந்து வாழ உம் அருள் தாரும்.
- வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை கைவிட்டு, இயற்கை இறைவன் வாழும் இல்லம் என்பதை உணர்ந்து இயற்கையையும் அதன் வளங்களையும் பாதுகாக்கும் நல்மனம் தாரும் ஆண்டவரே.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்

Amen 🙏 🙏
பதிலளிநீக்கு