தவக்காலம் இரண்டாம் வாரம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் : தொடக்க நூல் : 15:5-2, 17-18, 21
இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 3: 17 - 4:1
நற்செய்தி வாசகம் : மாற்கு 9: 28-36
நிறம்: ஊதா
திருப்பலி முன்னுரை
தவக்காலம் இரண்டாம் வாரம் வழிபாட்டில் பங்கேற்று உள்ளத்தில் இறைவனை ஏற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயேசு உருமாறிய போது அவரது மனித சாயல் மறைந்து இறைச்சாயல் வெளிப்படுகிறது. இதன்வழி அவரே இறைமகன் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கிறார் என்றும் அறியலாம். மேலும் இறப்புக்கு பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் தெரிகிறது.
உலக இன்பங்களில் சிக்கி, இறை உறவை மறந்து, வாழ்வின் நோக்கத்தை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கும் நாம் உளமாற்றம் பெற இதுவே சரியான தருணம் என்பதை உணர்வோம். உண்மையான மனித வாழ்வு உள மாற்றம் பெறுவதிலேயே உள்ளது.
எண்ணங்கள் தூய்மையானால், செயல்கள் நெறிபடும். உயரிய செயல்கள் வழி வாழ்வு மாற்றம் பெறும். மாற்றம் பெற்ற நம் வாழ்வு நம்மையும், நம்மைச் சார்ந்திருப்போரையும் மகிழ்ச்சி பெற செய்யும். இதற்காக வரம் வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஆபிராமுடன் கடவுள் செய்து கொண்ட உடன்படிக்கையை மையமாக வைத்து அமைகிறது. ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். ஆண்டவர் அதை நீதியாக கருதி ஆபிராமின் வழிமரபினரைப் பலுகிப் பெருக செய்தார். ஆபிராமின் நம்பிக்கை அவரில் உள மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஆபிராமின் வாழ்க்கை வழி உள மாற்றம் பெறுவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை
இயேசுவில் உருமாற தயாராக இருப்போர் இம்மண்ணுலகைப் பற்றி எண்ணாமல், விண்ணுலகைப் பற்றி எண்ணுவர். எண்ணங்கள் தூய்மையானால் இயேசுவின் சாயலாக நாம் உருமாற்றம் பெறுவது உறுதி என்கிறார் திருத்தூதர் பவுல். தம்மை மிகவும் தாழ்த்தி பின்னர் தந்தையால் உயர்த்தப்பட்ட இயேசுவைப் போல் வாழ்வோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- உம்முடைய அழைத்தல் வழி நீர் தேர்ந்து கொண்ட திரு அவை உறுப்பினர்கள் இறைமகன் இயேசுவின் பாதையில் பயணிக்க வரமருளும். உமது அழைப்பின் உண்மையை உணர்ந்தோராய் உளமாற்றம் பெற்று என்றும் உம் இறையாட்சியின் மதிப்பீடுகளை பறைசாற்ற வரமருளும்.
- நாட்டுத்தலைவர்கள், அதிகாரிகள் அனைவரும் மக்களின் வாழ்வை உயர்த்துவதற்கு தேவையான பணிகளை சரிவர புரியவும்; வறுமை, வேலையின்மை, போர் போன்ற இக்கட்டான சூழலில் இருந்து மக்களைக் காத்து, அவர்கள் வாழ்வு மேம்பட உழைக்க வேண்டுகிறோம்.
- சமூகத்தின் பல நிலைகளில் பல பரிமாணங்களில் உழைக்கும் பெண்கள் அனைவரும் இத்தவக்காலம் வழி உமது உடனிருப்பை அதிகமாக உணரவும், எம் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், சமாதானமும் நிலைபெற உம் அருளைப் பொழிந்தருளும்.
- மாணவ, மாணவியர் தம் கடமைகளை உணர்ந்து பெரியோர்களுக்கு கீழ்படிந்து வாழவும்; இளையோர், இளம் பெண்கள் தங்கள் வாழ்வை அலைபேசியில் சுருக்கிக் கொள்ளாமல் பரந்த மனதுடன் செயல்படவும், வாழ்வை சீரமைக்க வேண்டிய வழிமுறைகளைத் தந்து நெறிபடுத்தியருளும்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen ......
பதிலளிநீக்கு