ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் - எரேமியா 17:5-8
இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 15:12,16-20
நற்செய்தி வாசகம் - லூக்கா 6:17,20-26
நிறம்: பச்சை
திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு திருப்பலியோடு பாலர் சபை நாளையும் இணைந்து கொண்டாடுகிறோம். இன்றைய திருவழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
அன்பே உருவான இறைவன் நம்மை அன்பில் வாழ அழைக்கிறார். அன்பிற்கு அடிப்படை நம்பிக்கை. இதில் நாம் யார் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்பதும் நோக்கத்தக்கது. மனித நம்பிக்கை ஆழமற்றது. விரைவில் முற்று பெற்று, மனம் துவண்டுவிடும். ஆனால் இறை உறவில் நாம் கொண்டுள்ள நம்பிக்கை நம்மை தளர்ச்சியுற விடுவதில்லை. நம்மை தேற்றி ஆறுதல் அளிக்கவல்லது.
இறைவார்த்தைகள் நம்பிக்கை தரும். அந்த இறைவனின் வார்த்தை நற்செய்தி பணிக்கு நம்மை தயாரிக்கும்; துன்பமும் கவலைகளும் நம்மை வாட்டும்போது நமக்கு புத்துயிர் அளிக்கும். நம்பிக்கை மற்றும் இறைவார்த்தைகளை நம் இரு கண்களாகக் கொண்டு வாழும்போது இறைவுறவில் நிலைப்பது உறுதி.
இறைவனின் பிள்ளைகளாக வாழ, இறைமதிப்பீடுகளை நம்மில் மிளிரச் செய்ய, இறைநம்பிக்கையில் நிலைக்கும் வரம் கேட்டு இத்திருப்பலியில் செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
ஆண்டவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதர் மீது வைக்கும் நம்பிக்கையோ பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாகும் என்கிறார் இறைவாக்கினர் எரேமியா. புதர் வாடுவதுபோல மனிதர் மீது பற்று வைத்தோர் வாடுவர்; மாறாக இறைநம்பிக்கை என்றென்றும் நிலைத்து வறண்ட காலத்திலும் பயன்தரும். நாம் சோர்ந்த காலத்திலும் இறைநம்பிக்கை நம்மை வளப்படுத்தும் என்றுரைக்கும் வாசகத்திற்கு உள்ளங்களைத் திறப்போம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறுபெற்றவர்.
[ தி. பா 1: 1-2,3,4&6]
- நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர் பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால் அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
- அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வது அனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
- ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவார். நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையை தூய பவுல் விளக்குகிறார். இறந்த அனைவரும் உயிர்த்த இயேசுவின் பாதையில் உயிருடன் எழுப்பப்படுவர் என்ற நம்பிக்கை வேண்டும். இறையேசுவின் உயிர்ப்பு நம் பாவங்களுக்கு கழுவாய் ஆனது. அவரின் உயிர்ப்பு இறந்த அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதற்கு சான்று. இதை உணர்ந்தோராய் வாசகத்தை கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்கு கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். (லூக்கா 6:23)
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- அன்பின் இறைவா! திருஅவை உறுப்பினர்களான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் ஆகியோரை உம் கரம் தருகின்றோம். அவர்கள் உம் மதிப்பீடுகளை மண்ணில் விதைத்து மனிதத்தில் புனிதம் காண உம் அருள் வரங்களைப் பொழிந்து வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- தலைவர்கள் அனைவருக்கும் உயரிய தலைவரான எம் இறைவா! எம் நாட்டு தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, பொதுநலம் காக்கவும்; மக்கள் அனைவருக்கும் பாகுபாடற்ற சேவை புரிந்து, தங்கள் அழைப்பிற்கான நோக்கத்தை நிலைநாட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- திருக்குடும்பத்தின் மையமே இறைவா! எங்கள் குடும்பத்தில் உமது மதிப்பீடுகள் பிரதிபலிக்கவும், ஒற்றுமை, அன்பு, அனைவரையும் ஏற்கும் மனம் எம்மில் மலர உதவிபுரியும். ஏன்றென்றும் உம் பாதையில் நடந்து எம் வாழ்வின் வழி உம்மை பிறருக்கு வெளிப்படுத்த வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் என்றுரைத்த எம் இறைவா! குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்பதை உணர்ந்து அவர்களிடம் மாண்புடன் நட்பு பாராட்டவும்; சிறிய வயதிலிருந்தே எம் பிள்ளைகள் கிறிஸ்துவைப் போல் ஞானத்திலும், கீழ்படிதலிலும் சிறந்து விளங்க அவர்களுக்கு வழிகாட்ட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- வழிகாட்டும் நாயகனே இறைவா! தொற்றுநோய்கள் விரைவில் எங்களை விட்டு அகல வழிவகைச் செய்யும். இத்தொற்றுநோயால் வாழ்வை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உம் வழிகாட்டுதலில் புதுவாழ்வு பெறவும், அமைதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழ உம் அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen
பதிலளிநீக்கு