ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாசகங்கள்
முதல் வாசகம் - எசாயா 6:1-8
இரண்டாம் வாசகம் - 1 கொரிந்தியர் 15:1-11
நற்செய்தி வாசகம் - லூக்கா 5:1-11
நிறம் : பச்சை
திருப்பலி முன்னுரை
ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்துருப்போருக்கு வணக்கம்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது எப்படியோ மேலோட்டமாக வாழ்வது அன்று; மாறாக ஆழமாக நற்செய்தியைத் தியானித்து, கடைப்பிடித்து அதன்படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. நம்மில் பலர் எளிதான அகலமான வாழ்வு வாழ விரும்புகிறோம். ஆனால் அதன் பலன் வெறுமை தான் என்பதை நாம் உணர்வதில்லை.
ஆழத்தில் சென்று வலைகளைப் போடுவது சற்று கடினமான செயல்தான் என்றாலும், நம் விசுவாச வாழ்வு என்னும் வலையை கிறிஸ்து இயேசுவுக்குள் ஆழமாகப் போடுவதன் மூலம் நிலைவாழ்வைப் பெற இயலும். இறைவனுடன் ஆழமாக நெருங்கி, இறை உறவில் செயல்படும் போது நமக்கு உண்டாகும் மாசற்ற மகிழ்ச்சியை இந்த உலகம் எவ்விதத்திலும் தர இயலாது.
உலக நாட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் நாம் ஆழமாக வாழ விரும்புகின்றோமா அல்லது அகலமாக வாழ விரும்புகின்றோமா என்பதை சிந்திப்போம். துன்பங்களும் பாடுகளும் அதிகமானாலும் இறைவன் அருளும் சமாதானமும் ஆசீர்வாதமும் நம்மில் நிலைக்க திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பை கூறுகிறது. ஆண்டவர் முன் தனது குற்றங்களை தாழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு, இறைநம்பிக்கையில் நிலைத்து, இறைவாக்குப் பணியைத் துணிச்சலோடு ஏற்றதால் எசாயாவின் குற்றப்பழி அகற்றப்பட்டு இறைப்பணிக்காக தேர்ந்து கொள்ளப்பட்டார். எசாயாவின் மனநிலையில் இறைநம்பிக்கை, தாழ்ச்சி போன்றவற்றின்வழி இறைவன் முன் கருணைப் பெறுவோம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
[தி. பா. 138: 1-2, 2-3, 4-5, 7-8]
- ஆண்டவரே! என் முழுமனதுடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். பல்லவி
- உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி
- ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர் ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி
- உமது வலக் கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு! உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இரண்டாம் வாசகம் உயிர் பெற்று எழுதலை மையமாக வைத்து அமைகிறது. உயிர்த்த இயேசுவின் அருளே திருத்தூதர் பவுலை வழிநடத்தி, சிறப்பாக உழைக்க செய்து உயர்ந்த நிலையை அடைய வைத்தது. அதே உயிர்த்த இறைவன் நம் வாழ்விலும் தினமும் தோன்றி நற்செய்தி வழியாய் மீட்படைய அழைக்கிறார். வாசகம் வழி அவ்வழைப்பை ஏற்று மீட்பு பெறுவோம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி: மத் 4:19
"என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்", என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
- இரக்கத்தின் தந்தையே எம் இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவரத்தார் அனைவரையும் உம் கருணையால் கண்ணோக்கிப் பாரும். தூய ஆவியால் நிறைவு பெற்ற உம் திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைசிறந்து விளங்க உமது அருளைப் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- அன்பின் இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம் என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து, நீர் விரும்பும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டிய வரங்களைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- எமக்கு புத்துயிர் அளிக்கும் இறைவா! திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்து உம் வார்த்தைகளின்படி வாழ்வை அமைக்கவும் தூய ஆவியின் வழி செயல்பட்டு, அனைவரும் இணைந்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- கருணையின் உருவே எம் இறைவா! மதம், மொழி, இனத்தால் பிளவுபட்டு, போரினால் வாழ்வை இழந்த மக்களை கண்ணோக்கிப் பாரும். மக்கள் வன்முறையில் இருந்து விடுபட்டு, தனிமனித உரிமைகள் பாதுகாக்கப்படவும், மக்கள் மறுவாழ்வு பெற்று அமைதியிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கவும், தூய ஆவியின் வரங்களைப் பொழிந்து காத்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- புதுவாழ்வு வழங்கும் இறைவா! தொற்றுநோயால் தவிக்கும் மக்கள் விரைவில் நலம் பெறவும், இதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்துறை போன்ற பலத் துறைகளும் மீண்டும் புத்துயிர் பெற நோயின் தாக்கம் குறையவும், நோய் பயத்தில் இருந்து மக்களைக் காத்து புதுவாழ்வு வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
Amen
பதிலளிநீக்கு